அந்த அறிவிப்பிற்கிணங்க, அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்களை வாங்க இயலாத விவசாயிகளுக்கு உதவும் வகையில், நவீன மற்றும் புதிய வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக விலைக்கு வாங்கி விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலமாக உருவாக்கப்பட்ட நீர்சேகரிப்பு கட்டுமானங்களை ஆழப்படுத்தி பராமரித்திடவும், நீர்வரத்து கால்வாய்களை சீரமைத்திடவும், நீர்வடிப்பகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 87 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவில் 50 டிராக்டர்கள், 4 மண் தள்ளும் புல்டோசர் இயந்திரங்கள், டிராக்டர்களுக்கான பண்ணைக் கருவிகள், 10 நெல் அறுவடை இயந்திரங்கள், 2 நெல் உலர்த்தும் இயந்திரங்கள், ஒரு கரும்பு அறுவடை இயந்திரம், 30 சோளம் அறுவடை இயந்திரங்கள், 32 பல்வகை தானியங்களை கதிரடிக்கும் இயந்திரங்கள், 20 டிரக்குடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் இயந்திரங்கள், 17 மண் அள்ளும் இயந்திரங்கள், 10 பொக்லைன் போன்ற மண் அள்ளும் இயந்திரங்கள் உள்ளிட்ட 870 புதிய நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்கிடுவதற்காக, வேளாண்மைப் பொறியியல் துறைக்கு ஆணை வழங்கப்பட்டு, இவ்வியந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.