இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, இன்று தலைமைச் செயலகத்தில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் சென்னை மாவட்டம், கீழ்ப்பாக்கம், லுத்ரல் கார்டனில் 13 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், 15 கோடியே 39 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 43 காவலர் குடியிருப்புகள், 4 காவல் நிலையங்கள், 2 காவல்துறை கட்டடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான 1 குடியிருப்பு, 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடங்கள், காவல்துறை தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில செயல்பாட்டு மையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சமூக ஊடக மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.