உத்தமபாளையம்: தேனி மாவட்டம் ஹைவேவிஸ், மேகமலை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயத்தில் இருப்பதாக மலைகிராம மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
தேனி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் மேகமலை ஒன்றாகும். இங்குள்ள வானுயர்ந்த மரங்கள், மலைக்குன்றுகள், பள்ளத்தாக்குகள், நீர்நிலைகள், அணைக்கட்டுகள் என இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கிறது. அதேபோல யானை , சிறுத்தை, புலி, காட்டு மாடு மான் என பல்வேறு வன உயிரினங்களும் வசிப்பிடமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இப்பகுதிக்கு வர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் நிலவும் தட்பவெப்ப நிலை மேகமலையில் இருப்பதால் தேனி, மதுரை, திண்டுக்கல் , சென்னை என தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றன.
குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.
கரோனா அச்சத்தில் மலை கிராமத்தினர்: கரோனா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.
தற்போது ஊரடங்கு படிப்படியாக தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களுக்கு இ-பாஸ் பெற்றுச் செல்ல வேண்டும் என தமிழக அரசு அறிவித்தது.
ஆனால், ஹைவேவிஸ், மேகமலை பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறாமலும், கரோனா மருத்துவ பரிசோதனை செய்யாமல் வந்து செல்கின்றனர்.
இதன் காரணமாக கரோனா தொற்று இல்லாத பகுதியில் நோய்த்தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக மலை கிராமத்தினர் அச்சம் தெரிவித்தனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் ஹைவேவிஸ், மேகமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.