கனிமவளக் கொள்ளையைத் தடுக்க மாவட்ட, மாநில எல்லைகளில் கண்காணிப்புக் கேமராவை பொருத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரானைட் முறைகேடு தொடர்பாக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சிவஞானம், ஜெயச்சந்திரன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான 70 வழக்குகளில் தொடர்புடைய பலரின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கனிமவளக் கொள்ளை தொடர்பாக 2011-ஆம் ஆண்டு முதல் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கனிமவளக் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்த ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.