சிதம்பரம் அருகே பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவருக்கு அவமரியாதை

தமிழகத்தில் மேலும் ஒரு பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 
சிதம்பரம் அருகே பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவருக்கு அவமரியாதை
சிதம்பரம் அருகே பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவருக்கு அவமரியாதை

புவனகிரி: தமிழகத்தில் மேலும் ஒரு பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் அவமதிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சிமன்றத் தலைவராக இருப்பவர் பட்டியலினத்தை சேர்ந்த ராஜேஸ்வரி. 

கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி நடைபெற்ற ஊராட்சிக் கூட்டத்தில் ஊராட்சிமன்றத் தலைவர் ராஜேஸ்வரி தரையில் அமரவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருவதால் சர்ச்சை எழுந்துள்ளது. 

இதுகுறித்து ஊராட்சிமன்றத் துணைத்தலைவர் மோகன் மீது புவனகிரி காவல்நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.

மேலும் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் மோகன்ராஜ்,  ஊராட்சிமன்ற செயலர் சிந்துஜா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

புவனகிரி காவல்நிலைய காவலர்கள் ராஜேஸ்வரியிடம் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி கூறுகையில், சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து இன்றுதான் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் உண்மைதான் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவுடன் அந்த ஊராட்சிக்கு சென்று கொண்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே இந்த சம்பவம் குறித்து மேலதிகாரிகளுக்கு புகார் அளிக்காத ஊராட்சி செயலர் சிந்துஜாவை பணியிடை நீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  

ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் ஆத்துப்பாக்கம் பெண் ஊராட்சிமன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவம் குறித்து ராஜேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியாதவது: 
பஞ்சாயத்து கூட்டத்தின் போது நீ தரையில்தான் உட்கார வேண்டும். நான்தான் எல்லாம் செய்வேன் என்று மோகன் செல்வார். அதனால், நானும் கீழேயே உட்கார்ந்திருப்பேன். கொடி ஏற்றும் போதும் நான்தான் ஏற்றுவேன், நீ ஏற்றக்கூடாது என்று சொல்லி விடுவார். நானும் அனுசரித்து போவேன். ஒரு கட்டத்துக்கு மேல் அவரது தொந்தரவு தாங்க முடியாமல் நான் நடவடிக்கை எடுக்க முடிவு செய்தேன் என்று ராஜேஸ்வரி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com