திருமலையில் அக்.16ம் தேதி முதல் நடக்கவுள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தை தனிமையில் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய வைபவம் பிரம்மோற்சவம். பிரம்மாண்ட நாயகனின் பிரம்மோற்சவம். எப்போதும் லட்சகணக்கான பக்தர்கள் புடைசூழ ஒரு பெரிய திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இம்முறை கோவிட் -19 விதிமுறைகளுக்கு உள்பட்டு அனைத்து கோயில்களிலும் உற்சவங்களும், விழாக்களும் நடந்து வருகிறது.
மேலும், திருமலையில் இந்தாண்டு இரு பிரம்மோற்சவம் நடத்த தேவஸ்தானம் முடிவு செய்து, கடந்த மாதம் வருடாந்திர பிரம்மோற்சவம் மாடவீதி புறப்பாடு இல்லாமல் ஏகாந்தமாகக் கோயிலுக்குள் தனிமையில் நடத்தப்பட்டது. ஆனால் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் குறைந்த அளவில் பக்தர்களை அனுமதித்து நடத்த தேவஸ்தான அதிகாரிகள் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர்.
ஆனால், தற்போது கரோனாவின் தாக்கம் கட்டுக்கடங்காமல் பெருகி வரும் நிலையில் பக்தர்களை திருமலைக்கு அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள், மாவட்ட மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து கலந்துரையாடல் கூட்டம் நடத்தி மேற்பட்ட நடவடிக்கைகள் குறித்து பரிசீலனை செய்தனர்.
அதில் பக்தர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு அக்.16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடக்கவுள்ள நவராத்திரி பிரம்மோற்சவத்தையும் தனிமையில் நடத்த தேவஸ்தானம் அதிகாரிகள் குழு முடிவு செய்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டது.