அதிமுகவின் 49-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுக்கு, மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிகழாண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பது வரவேற்கக் கூடியது. இருந்தபோதிலும் அரசு பள்ளி மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.
இதனை அதிகப்படுத்தவே, முதல்வர் பழனிசாமி அவர்களின் நடவடிக்கையால், மருத்துவ மாணவர் இட ஒதுக்கீட்டில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.
இந்த கோரிக்கையை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார். இதற்கு விரைவில் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கிறோம். இதனால் இந்தாண்டு 325 மாணவர்களுக்கு மேல் பயன்பெறுவார்கள் என்றார்.
தொடர்ந்து திமுக எம்பி பொன்.கவுதமசிகாமணியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கம் செய்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இவர்கள் தான் ஊழலை ஒழிக்கப் போவதாக சொல்கிறார்கள் என அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்தார்.