ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு
அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தமைக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டு ஒன்றரை மாதம் ஆன நிலையில், எதிர்க்கட்சிகள், அதிமுக அமைச்சர்கள் வலியுறுத்தியும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கால அவகாசம் கோரி வந்தார்.
தொடர்ந்து ஆளுநர் காலம் தாழ்த்தி வந்ததால் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான தமிழக அரசு இதற்கான அரசாணையை வியாழக்கிழமை பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து, இது சட்டமாக மாறியுள்ளது.
இதையடுத்து, மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, முதல்வர் பழனிசாமி இன்று மாலை ஆளுநரை சந்தித்தார். சென்னை கிண்டி ராஜ்பவனில் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆளுநருக்கு நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.