ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அசோகனுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
நல்லாசிரியர் விருது
நல்லாசிரியர் விருது

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டிவி அசோகனுக்கு தமிழக அரசின் கல்வித்துறையின் உயரிய விருதான நல்லாசிரியர் விருது கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு தன்னலமற்ற கல்விச் சேவை புரிந்ததற்காக இன்று வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார். 

கொசவன்பேட்டை நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் வேலாயுதம் தாட்சாயணியின் மகன் இவர். 1996 ஆம் ஆண்டு முதன்முதலாக காஞ்சிபுரம் மாவட்டம் சூராடிமங்கலம் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக தன் கல்விப் பணியைத் தொடங்கி, 1997 ஆம் ஆண்டு நெல்லிமரத்துக்கண்டிகையிலும் 2002 ஆம் ஆண்டு பாலவாக்கம் பள்ளியிலும் 2005 ஆம் ஆண்டு திருக்கண்டலம் உயர்நிலைப் பள்ளியிலும் பல்வேறு ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி அறிவு புகட்டினார். 

2011 ஆம் ஆண்டு அனைவருக்கும் கல்வி மேற்பார்வையாளராக மீஞ்சூர் ஒன்றியத்திற்கு பதவி உயர்வு பெற்றார். 2012 ஆம் ஆண்டு அத்திவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் 100% தேர்ச்சியை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள், தமிழக அறிவியல் மன்றம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இவருடைய கல்விப் பணி கிராமப்புற மாணவர்களுக்கு ஆற்றிய சேவை, மாணவர்கள் மீது கொண்ட அக்கறை மற்றும் 100 சதவிகித தேர்ச்சிக்காகப் பல்வேறு விருதுகளை வழங்கி பாராட்டியுள்ளது. இவர் ஆரணி அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com