தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழையும், கோவை உள்பட 10 மாவட்டத்தில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்
தேவலா 10 செ.மீ மழையும், பந்தலூர் 5 செ.மீ மழையும், சோலையார், தஞ்சாவூர், சின்னக்கல்லார், சின்கோனா, மேல் பவானி, வால்பாறை, கோத்தகிரி, வெண்ட் ஒர்த் எஸ்டேட் தலா 3 செ.மீ மழையும் பெய்துள்ளது.