நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சனிக்கிழமை மேலும் 20 காசுகள் உயர்ந்து ரூ.4.90-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலால் நாடு முழுவதும் உணவுப் பொருளான முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது. புரதச்சத்து மிக்க முட்டையை அனைவரும் இவ்வேளையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர். கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் இருந்த முட்டைத் தொழில் தற்போது வளர்ச்சி கண்டு வருகிறது.
மற்ற மண்டலங்களில் முட்டை விலை உயர்ந்து வருவதுடன், அரசு சார்பில் மக்களுக்கு, மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இவ்வாறான நடைமுறை அமலில் உள்ளது. உற்பத்தி குறைந்த நிலையில் தேவை அதிகரிப்பால் பண்ணைகளில் முட்டைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் 50 காசுகள் குறைவாக வைத்து முட்டைகளை வாங்கிய நிலையில் தற்போது 20 காசுகள் குறைவாக கொள்முதல் செய்கின்றனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. பிற மண்டலங்கள் விலை உயர்வு மட்டுமின்றி, மக்களிடையே நுகர்வு அதிகரித்துள்ளதாலும், மழைக்காலமாக இருப்பதாலும் முட்டை விற்பனை உயர்ந்து வருகிறது. அதனடிப்படையிலேயே கடந்த புதன், வியாழக்கிழமை அடுத்தடுத்து 25 காசுகள் உயர்த்தப்பட்டது. இன்றும்(சனிக்ழமை) மேலும் 20 காசுகளை உயர்த்தி, பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90-ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.104–ஆகவும், முட்டைக் கோழி கிலோ ரூ.113–ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.