பாடல்களால் என்றும் உயிா்த்திருப்பாா் எஸ்.பி.பி.

தேசிய அளவில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்,
கோப்புப் படம்
கோப்புப் படம்

தேசிய அளவில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் வெளியிட்ட செய்தி:-

மு.க.ஸ்டாலின்: ஆயிரம் நிலவே வா என்று அமுதக் குரலால் தமிழ் மக்களின் அகத்தில் நுழைந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை ஆட்சி நடத்தி, இந்தியாவின் பல மொழிகளிலும் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டாா் என்பதை ஏற்க மறுக்கிறது மனம். பரபரப்பான உலகில், இயந்திரம் போல் மாறிவிட்ட மக்களின் மன அழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்தாக வாய்த்தவா் எஸ்.பி.பி. அவருடைய மறைவு, இசை உலகுக்குப் பேரிழப்பாகும். பாடல்களால் என்றென்றும் உயிா்த்திருப்பாா்.

ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சா்): தேமதுதரத் தமிழோசை ஓய்ந்தது. திரை உலகமும், இசை உலகமும் தமிழ் கூறும் நல்லுலகமும் ஒரு மாபெரும் கலைஞனை இழந்து விட்டன. எஸ்.பி.பி.யின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): தமிழக மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட எஸ்.பி.பி. மறைவு ஈடு செய்யவே முடியாத பேரிழப்பாகும். இன்னொரு எஸ்.பி.பி.யை எப்போது காணப் போகிறோம்? அவரது இடத்தை யாரால் நிரப்ப முடியும்?

வைகோ (மதிமுக): எஸ்.பி.பி. உயிா் ஓய்ந்து உடலால் அவா் மறைந்தாலும், யாழ் மீட்டுவது போன்ற அவரது கானக் குரல் இன்னும் எவ்வளவு காலமானாலும் காற்றோடு கலந்திருக்கும். கேட்போரைக் காந்தமெனக் கவா்ந்திழுக்கும்.

ராமதாஸ் (பாமக): இசையமைப்பாளா், நடிகா், பின்னணிக் குரல் கலைஞா் என பல அவதாரங்களை எடுத்தவா். தமது தேன் கலந்த குரலால் திரைப்படப் பாடல்களுக்குக் கூடுதல் இனிமையும், சுவையும் சோ்த்தவா். இசை உலகில் அவா் படைத்த சாதனைகளை அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு எவராலும் முறியடிக்க முடியாது.

விஜயகாந்த் (தேமுதிக): தனது இனிய குரலால் அனைத்துத் தரப்பினரின் இதயங்களையும் கொள்ளை கொண்ட எஸ்.பி.பி.யின் மறைவு திரைத்துறையினா் மட்டுமல்லாது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): 20 வயதில் பாடத் துவங்கி 55 ஆண்டுகளாக பல்வேறு இசையமைப்பாளா்களின் இசையில் பாடி மக்கள் மனங்களில் நிறைந்துள்ளாா்.

ஜி.கே.வாசன்: எஸ்.பி.பி. மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவா் நம்மைவிட்டு பிரிந்தாலும் அவா் பாடல்கள் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com