திருச்சியில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள மார்மளவு பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவிச்சாயம் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர்.
இதுகுறித்து கண்டனம் தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் மக்களிடம் இருந்து புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ''இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல; தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவமதிப்பதாக நினைத்து அச்செயல் செய்பவர்கள் தங்களைத் தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்'' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.