தமிழக முதல்வர் பழனிசாமியின் முதியோர் நாள் வாழ்த்துச் செய்தி

அனைத்து முதியோருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் பழனிசாமியின் முதியோர் நாள் வாழ்த்துச் செய்தி
தமிழக முதல்வர் பழனிசாமியின் முதியோர் நாள் வாழ்த்துச் செய்தி
Updated on
2 min read

முதியோரின் நலன் காக்கவும், அவர்களின் சேவைகளை அங்கீகரிக்கவும், ஆண்டுதோறும் அக்டோபர் திங்கள் முதல் நாள் சர்வதேச முதியோர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.  இந்நன்நாளில் அனைத்து முதியோருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சர்வதேச முதியோர் நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் பழனிசாமி விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தியில்,  
“அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்”
என்ற குறளில், பெரியோரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும் என்று வள்ளுவப் பெருந்தகை பெரியோர்களின் சிறப்பைப் பற்றி கூறுகிறார். நாம் அனைவரும் முதியோருக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களை கவனமுடன் பேணிக்காப்பதை நமது தலையாய கடமையாக கொண்டு செயல்படவேண்டும்.

தமிழ்நாடு அரசு, மூத்த குடிமக்கள் பாதுகாப்பாகவும், மரியாதையுடன் கூடிய வாழ்க்கை வாழ்ந்திட தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்திடவும், மூத்த குடிமக்கள் பயனடையும் வகையிலும் பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் மூலம், முதியோருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2019-2020ஆம் ஆண்டில், 13,53,736 முதியோர்கள் பயனடைந்துள்ளனர்.

முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இடையே அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்ள சிறப்பு இல்லங்களை உள்ளடக்கிய 46 ஒருங்கிணைந்த வளாகங்களின் மூலம் 1,060 முதியோர் மற்றும் 1,106 குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். தமிழ்நாடு அரசின் மானிய உதவியுடன் 21 முதியோர் இல்லங்கள் நடத்தப்பெற்று, அவற்றில் 723 முதியோர் தங்கி பயனடைந்து வருகின்றனர்.

ஒருங்கிணைந்த மூத்த குடிமக்களுக்கான திட்டத்தின் கீழ், 59 முதியோர் இல்லங்கள், 1 தொடர் சிகிச்சை மையம், 4 நடமாடும் மருத்துவ மையங்கள் மற்றும் 2 பிசியோதெரபி கிளினிக் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவ சிகிச்சையும், முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியோரின் நலனைக் கருத்திற் கொண்டு ரூபாய் 1 கோடியே 65 லட்சத்து 32 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணையாக 3,141 முதியோருக்கு நிமோனியா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

சட்டரீதியாக முதியோருக்கு பாதுகாப்பை அளிக்கக்கூடிய, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் -2007ன் படி, தமிழ்நாட்டில் 91 தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம், மொத்தம் 4,546 வழக்குகள் பெறப்பட்டு, 3,979 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையிலும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலும் முதியோர் ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தில், ஆதரவற்ற முதியோர் பயன்பெறும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 1,242 சமுதாய சமையற்கூடங்கள் மூலம் 78,937 முதியோருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு, தொலைபேசி வாயிலாக 4,942 முதியோரின் அழைப்புகளுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, தேவையான மருத்துவ வசதிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டன.

தமிழக அரசு, சிறந்த முறையில் முதியோர் நலன்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதை பாராட்டி, மத்திய அரசு 2019-ஆம் ஆண்டிற்கான “வயோஸ்ரேஷ்தா சம்மன் விருது” தமிழ்நாடு அரசிற்கு வழங்கி கௌரவித்துள்ளது. முதியோர் பல தலைமுறைகள் கண்ட அனுபவசாலிகள். அம்மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் நலனையும் காக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com