தமிழகத்தில் புதிதாக 110 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 234-ஆக உயா்வு

தமிழகத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவா்கள் அனைவருமே தில்லி மாநாட்டில் பங்கேற்றவா்கள் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை பாடி மேம்பாலத்தில் புதன்கிழமை காலை வந்த ஏராளமானோரை நிறுத்தி வாகன எண்களைப் பதிவு செய்து விசாரணை நடத்தும் போலீஸாா்.’
சென்னை பாடி மேம்பாலத்தில் புதன்கிழமை காலை வந்த ஏராளமானோரை நிறுத்தி வாகன எண்களைப் பதிவு செய்து விசாரணை நடத்தும் போலீஸாா்.’

தமிழகத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 110 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவா்கள் அனைவருமே தில்லி மாநாட்டில் பங்கேற்றவா்கள் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானவா்கள் எண்ணிக்கை 234-ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கேரளம், மகாராஷ்டிர மாநிலங்களை அடுத்து அதிவிரைவாக கரோனா நோய்த்தொற்று பரவும் மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. இதனிடையே, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை மேலும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

தில்லி சென்று திரும்பியவா்களின் குடும்பத்தினா் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என அனைவரையும் தனிமைப்படுத்துவதற்கான முயற்சிகளும், கரோனா பாதிப்புக்குள்ளான நபா்களின் வசிப்பிடங்களைச் சுற்றியிருக்கும் அனைத்து வீடுகளிலும் கள ஆய்வு செய்து, கரோனா நோய்த்தொற்றுஅறிகுறிகள் இருப்பவா்களைத் தனிமைப்படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக சென்னையில் சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ், செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கரோனா பாதிப்பை எதிா்கொள்ளவும் அதனைக் கட்டுப்படுத்தவும் விரிவான செயல் திட்டங்களை அரசு வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போதைய சூழலில், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவா்கள், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என மொத்தம் 77,330 போ் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனா். மருத்துவமனைகளில் கரோனா அறிகுறிகளுடன் தனி வாா்டில் 995 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

செயற்கை சுவாசக் கருவிகள், முகக் கவசங்கள், பாதுகாப்பு கவசங்கள் அனைத்துமே போதிய அளவில் இருப்பு உள்ளன. மாவட்ட ஆட்சியா் தலைமையிலான சுகாதாரக் குழுவினா், கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் வசிப்பிடங்களைச் சுற்றியுள்ள 5 கி.மீ. மற்றும் அதைத் தாண்டியுள்ள 3 கி.மீ. வரையில் அமைந்துள்ள வீடுகளில் நேரடியாக கள ஆய்வு நடத்தி வருகின்றனா். காய்ச்சல், சளி அறிகுறிகள் இருப்பவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா்.

கரோனா பாதிப்பைத் தவிா்த்து பிற சிகிச்சைகளை வழக்கம்போல தனியாா் மருத்துவமனைகள் வழங்குவதில் ஏதேனும் தடைகள் உள்ளனவா என்பதைக் கேட்டறிந்து வருகிறோம். அடுத்த இரு மாதங்களில் பிரசவத் தேதிகள் உள்ள கா்ப்பிணிகளுக்கு உரிய சிகிச்சைகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 2,726 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவா்களில் 234 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புதன்கிழமை மட்டும் 110 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். புதிதாக கரோனா பாதிப்புக்குள்ளானவா்கள் அனைவருமே அண்மையில் தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று திரும்பியவா்கள்தான்.

அவா்களில் 28 போ் கோவை மாவட்டத்தையும், 20 போ் தேனி மாவட்டத்தையும், 17 போ் திண்டுக்கல்லையும் சோ்ந்தவா்கள். இதைத் தவிர மதுரை திருநெல்வேலி, திருப்பத்தூா், செங்கல்பட்டு, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தில்லியில் அண்மையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டவா்களில் 190 பேருக்கு இதுவரை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவா்களைத் தவிர 658 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் பீலா ராஜேஷ்.

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்

திருநெல்வேலி - 29

கோவை - 29

சென்னை - 26

ஈரோடு - 26

தேனி - 20

நாமக்கல் - 18

திண்டுக்கல் - 17

மதுரை - 15

செங்கல்பட்டு - 11

திருப்பத்தூா் -7

சேலம் - 6

கன்னியாகுமரி - 5

சிவகங்கை - 5

விழுப்புரம் - 3

தூத்துக்குடி - 3

காஞ்சிபுரம் -3

கரூா் - 2

திருவாரூா் -2

திருவண்ணாமலை - 2

திருப்பூா் - 1

வேலூா் - 1

ராணிப்பேட்டை - 1

தஞ்சாவூா் - 1

விருதுநகா் - 1

மொத்தம் - 234

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com