திருப்பூரில் தன்னைத்தானே வெட்டிக் கொண்டு நாடகமாடிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருப்பூர், அவிநாசி காவல் உட்கோட்டத்துக்க உள்பட்ட கணகம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பகவான் நந்து என்கிற நந்தகோபால்(50), இவர் தன்னுடைய சுய விளம்பரத்துக்காக மார்ச் 17 ஆம் தேதியன்று தன்னைத் தானே கத்தியால் வெட்டிக்கொண்டு நாடகமாடியுள்ளார்.
இதுகுறித்து பெருமாநல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பகவான் நந்து தன்னைத்தானே வெட்டிக் கொண்டு நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து, பகவான் நந்துவைக் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே, பகவான் நந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மக்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி அதில் ஆதாயம் தேடும் நோக்கில் செயல்பட்டது தெரியவந்தது.
ஆகவே, அவரை குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல், மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்திருந்தார். இந்தப்பரிந்துரையின்பேரில் பகவான் நந்துவை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் வியாழக்கிழமை உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பகவான் நந்துவிடம் காவல் துறையினர் நேரில் வழங்கினர்.