

திருவொற்றியூர்: எண்ணூர் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதையொட்டி நாட்டு மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி, அகல்விளக்கு, டார்ச் லைட் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு எண்ணூர் பகுதியில் விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்கு மெழுகுவர்த்தி, டார்ச் லைட் மூலம் ஒளி ஏற்படுத்தும் நிகழ்வில் பங்கேற்றனர்.
அப்போது சிலர் வானில் சென்று வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்கச் செய்தனர். இதில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு அருகே உள்ள காலி இடத்தில் திடீரென ராக்கெட் பட்டாசு ஒன்று கீழே விழுந்து தீப்பற்றியது.
தமிழ்நாடு கனிமவள நிறுவனத்திற்கு சொந்தமான இந்த இடத்தில் காய்ந்து போன புற்கள், மரங்கள் உள்ளிட்டவைகளால் புதர் போல் காட்சி அளித்த இப்பகுதியில் உடனே தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயினால் ஏற்பட்ட புகை மண்டலம் சுனாமி குடியிருப்பு பகுதியில் முழுவதுமாக பரவியது.
இதனால் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்தே மக்கள் வீட்டைவிட்டு அலறிக்கொண்டு வெளியே ஓடிவந்தனர். இது குறித்த தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து எண்ணூர் காவல் நிலைய காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.