ஊரடங்கை மீறி பல கிலோமீட்டர் தூரம் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், 'ஊரடங்கை மீறி பலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி வருகின்றனர். மளிகைக் கடைக்குச் செல்வதாகக் கூறி பல கிமீ தூரத்திற்கு வாகனங்களில் பயணம் மேற்கொள்கின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் ஒரு சில கிமீ தூரத்திலேயே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கரோனா பரவலின் வீரியத்தை மக்கள் உணராமல் உள்ளனர். காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அருகில் உள்ள கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.
மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மக்களுக்காக அனைத்துத் துறைகளும் கடுமையாக வேலை செய்து வரும் நிலையில், அதன் வீரியத்தை மக்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கக் கூடாது. அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை மனதில் கொள்ளவேண்டும்.
சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தார்.