வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும்: பிரதமரிடம் டி.ஆர்.பாலு கோரிக்கை
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இன்று காலை பிரதமருடனான ஆலோசனைக்குப் பின்னர் திமுக எம்.பி.யும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதன்படி, சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மாத ஊதியத்தை கரோனா தடுப்புப் பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். திமுக எம்.பிக்களின்தொகுதி நிவாரண நிதியில் இருந்து ரூ.1 கோடி வரையில் வழங்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்துவர பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
மேலும், இந்த சூழ்நிலையில், புதிய நாடாளுமன்றம் தேவையா? என பிரதமரிடம் கேட்டேன். மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை, உள்ளிட்டோர் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா தடுப்புப் பணிக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி போதாது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்க வேண்டும். நடுத்தர குடும்பத்தினர் எரிவாயு பெற ரூ. 5,000 மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமரிடம் தெரிவித்தேன். இதுகுறித்து அவர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன்.
கரோனா தடுப்பு பணியில் கட்சி பாகுபாடு மறந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என்றார்.