

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை, மாறாக தகவல் தெரிவித்தாலே போதும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஏழை, எளிய மக்கள் வேலையின்றி, உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அரசியல் கட்சிகள், சமூ நல அமைப்புகள், தன்னார்வலர்கள் மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் உணவுகளை வழங்கி வருகின்றனர். ஆனால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் நேரடியாக மக்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கக் கூடாது என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவதன் மூலமாக மக்களுக்கு கொண்டு சேர்க்கலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து, தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், 'கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர், சாலையோரங்களில் வசிப்பவர்கள், வெளி மாநிலத் தொழிலாளர்கள், தினக்கூலிகள் உள்ளிட்டவர்களுக்கு உணவு, மருந்து ஆகிய உதவிகளை வழங்கி வந்தோம். இந்த உதவிகளை வழங்கும் போது அரசு வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியைக் கடைபிடித்தும், கையுறை, முகக்கவசம் அணிந்துதான் உதவிகளை வழங்கினோம்.
ஆன்லைன் வழியாக வசதியானவர்களுக்கு பொருள்கள் கிடைக்க வசதிகளை ஏற்படுத்தியுள்ள தமிழக அரசு ஏழை, எளிய பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட பொருள்கள் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்கள், மருந்து உள்ளிட்ட பொருள்களை வழங்கும் அரசியல் கட்சி தலைவர்களை தடுக்கக்கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிபந்தனையுடன் அனுமதியளித்து உத்தரவிட்டனர்
அதன்படி, 'ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அதிகாரிகளிடம் அனுமதி பெறத் தேவையில்லை. 48 மணி நேரத்துக்கு முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தால் மட்டும் போதும். மக்களுக்கு உதவி செய்பவர்கள் நேரடியாக சென்று உணவுப் பொருட்களை வழங்கலாம். அதே நேரத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மக்களிடம் உணவுப் பொருட்களை வழங்க 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும்' என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.