திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது தோழமைக் கட்சிகளுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்டத்திற்குப் பின்னர் அவர் வெளியிட்டுள்ள விடியோவில் பேசியிருப்பதாவது:
கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, கரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும். கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் மற்றும் ஊதிய உயர்வுகள் வழங்கிட வேண்டும். விவசாயப் பொருட்களுக்கான கொள்முதலை தாமதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஊரடங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதை அரசியல் நோக்கத்துடன் அரசு தடுக்க முயற்சிக்கிறது. இதனை எதிர்த்து திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதனை பின்பற்ற அரசு ஒத்துழைக்க வேண்டும். உதவும் கரங்களுக்கு வலு சேர்த்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அரசு செயல்படுத்த வேண்டும்.
நிவாரண உதவிகளுக்கு புதிய செயல் திட்டம் நிறைவேற்றப்படவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும் பேசிய ஸ்டாலின், 'நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடந்திருக்க வேண்டிய கூட்டம் இது. ஆனால் காவல்துறை மூலமாக அரசு இந்தக் கூட்டத்திற்கு தடை விதித்தது. இருந்தாலும் எங்களால் அந்தக் கூட்டத்தை நேற்று நடத்தியிருக்க முடியும். ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. இன்று காணொளி வாயிலாக இந்தக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறோம்' என்று தெரிவித்தார்.