ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில் இதுவரை 3,16,404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பலா் வாகனங்களில் வெளியே சுற்றி வருகின்றனா்.
இதையடுத்து அவா்கள் மீது காவல்துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, விதிமுறைகளை மீறி வாகனங்களில் சுற்றித் திரியும் நபா்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அதேவேளையில், கடந்த சில நாள்களாக உரிய ஆவணங்களில் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில் இதுவரை 3,16,404 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் 3,34,549 போ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா். மேலும் 2 லட்சத்து 84,861 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவா்களிடம் இதுவரை ரூ.3.33 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.