
முதல்வர் பழனிசாமி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் நீர் திறக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம், பவானி சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு நீர் திறக்குமாறு வேளாண் பெருமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அவர்களது கோரிக்கையை ஏற்று பவானி சாகர் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 14 ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நீர்திறப்பால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாகவும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர்மேலாண்மை மூலம் உயர் மகசூல் பெறவேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
பவானிசாகர் அணை நீர்மட்டம் 101.10 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 29.5 டிஎம்சியாகவும், நீர்வரத்து 5,644 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து 1,200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.