கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்தும் அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பேரிடர் காலத்தில் வாடிக்கையாளர்களை வங்கிகள் வாட்டி வதைக்க நினைப்பது மனிதாபிமானம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''வங்கிகளில், தனிநபர் மற்றும் நிறுவனங்கள் பெற்ற கடனுக்கான தவணைத் தொகையை (EMI) செலுத்தும் கால அவகாசம், ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.
கொரோனாவின் தாக்கம் எந்த அளவிற்குத் தீவிரமாக இருக்கிறது, தனிநபர் வருமானம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸுக்குத் தெரியும்.
ரிசர்வ் வங்கியின் இந்த செயல் வாடிக்கையாளருக்கு முதல் சேவை என்ற இலக்கணத்திற்கும் விரோதமானது; வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடப்போரின் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சும் செயல் இது.
எனவே வருமானம் என்ற நிதி ஆதாரத்தின் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நிற்பதை உள்மனதில் வாங்கி, கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்த மேலும் 6 மாதங்களுக்கு அவகாசம் அளித்திட வேண்டும்.
மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கியின் உபரித் தொகையிலிருந்து ரூ.57,128 கோடி கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கும் ரிசர்வ் வங்கிக்கு, ஏழை - எளிய, நடுத்தர மக்களுக்காக உதவிசெய்ய முன்வருவது மிகப்பெரிய சவால் அல்ல என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநர் மனதில் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.