
சென்னை: பொதுமக்களுக்கு சரியான தகவல்களை கொண்டு சேர்க்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள 700 இந்திய விஞ்ஞானிகள் தாங்களாகவே முன்வந்து கொவைட் 19- க்கு இந்திய விஞ்ஞானிகளின் பதில் (ஐஎஸ்ஆர்சி) என்ற தளத்தை உருவாக்கியுள்ளனர்.
www.indscicov.in என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பல்வேறு மாநில மொழிகளில் தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்று விஞ்ஞான் பிரசார் அமைப்பின் அறிவியல் தொடர்பாளரும், விஞ்ஞானியுமான டி.வி.வெங்கடேஸ்வரன் கூறினார்.
"பெருந்தொற்று காலத்தில் சமூக ஊடகங்களின் வாயிலாக அறிவியல் விழிப்புணர்வு பிரசாரம்' என்ற தலைப்பில் மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் (பிஐபி) திங்கள்கிழமை ஏற்பாடு செய்திருந்த இணையக் கருத்தரங்கில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதைத் தெரிவித்தார்.
உண்மையான மற்றும் அறிவியல் சார்ந்த செய்திகளும், மனநலப் பாதுகாப்பு நோய் தொற்று தொடர்பான சமூகப் பிரச்னைகள், அறிவியல் ஆராய்ச்சிகள், மருத்துவத் தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
இதே போல் டாடா அடிப்படை ஆராய்ச்சி மையமும், இந்திய அறிவியல் கழகமும் இணைந்து செயல்படுத்தும் கொவிட்கியான் என்ற இணையதளமும் நோய்தொற்று குறித்த பல்வேறு ஆராய்ச்சித் தகவல்களை வழங்குவதாக டி.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
முன்னதாக இந்தக் கருத்தரங்கில் அறிமுக உரை நிகழ்த்திய சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (பிஐபி) கூடுதல் தலைமை இயக்குநர் மா.அண்ணாதுரை, இந்திய அளவிலும் உலக அளவிலும் அறிவியலின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு "இந்திய மற்றும் சர்வதேச நலனுக்கு அறிவியல்' என்பது 2020 சர்வதேச அறிவியல் திருவிழாவின் கருப்பொருளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.
இந்தக் கருத்தரங்கில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குநர் குருபாபு பலராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.