
கோவை ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி புது தில்லி எல்லைகளில் பஞ்சாப் உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி விவசாய அணி, மதிமுக உள்பட பல்வேறு அமைப்புகள் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 87 பேர் கைது செய்யப்பட்டு பின் மாலையில் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை விவசாயிகள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழு தலைவர் சு.பழனிசாமி உள்பட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.