அதிமுக முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு மரண தண்டனை: தேனி நீதிமன்றம் தீர்ப்பு 

ஹைவேவிஸ் பேரூராட்சி முன்னாள் தலைவருக்கு மரண தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை, தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதிமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் சுரேஷ்
அதிமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் சுரேஷ்

தேனி அருகே சின்னமனூரில் கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்றதாக நாடகமாடிய ஹைவேவிஸ் பேரூராட்சி முன்னாள் தலைவருக்கு மரண தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை, தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சின்னமனூர், காந்திநகர் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சுரேஷ் (36). அதிமுக கட்சியைச் சேர்ந்த இவர், ஹைவேவிஸ் பேரூராட்சியில் தலைவராகப் பதவி வகித்தார். இவரது மனைவி கற்பகவள்ளி (19). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2015, ஜூலை 21-ம் தேதி சுரேஷ், தனது மனைவி கற்பகவள்ளியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து சித்திரவதை செய்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த கற்பகவள்ளியை, சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக நாடகமாடியுள்ளார்.

கர்ப்பிணியான கற்பகவள்ளி மேல் சிகிச்சைக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவருக்கு கருச்சிதைவும் ஏற்பட்டிருத்தது. கற்பகவள்ளியின் பிரேதப் பரிசோதனையில், அவர் அடித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. 

இதனடிப்படையில் சின்னமனூர் காவல் நிலைய காவல்துறையினர், மனைவியை அடித்துக் கொலை செய்ததாக சுரேஷ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதி ஏ.அப்துல்காதர், மனைவியை அடித்துக் கொலை செய்த சுரேஷிற்கு தூக்குத் தண்டனையும் அவரது கருச்சிதைவுக்குக் காரணமாக இருந்ததற்காக 10 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com