
Chance of heavy rain in 9 districts including Villupuram: Meteorological Center
தமிழகத்தில் விழுப்புரம் உள்பட 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ஏனைய வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும், இதுவரை வடகிழக்கு பருவமழை 452 மி.மீ மழை பெய்துள்ளது.
தமிழகம் புதுச்சேரியில் இயல்பை விட வடகிழக்கு பருவமழை 8 சதவீதம் அதிகமாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்
BASL மணம்பூண்டி 17 செ.மீ மழையும், ஆனந்தபுரம், கேதார், திருக்கோயிலூர் தலா 16 செ.மீ மழையும், புதுச்சேரி 15 செ.மீ மழையும், மயிலம் 13 செ.மீ மழையும், உளுந்தூர்பேட்டை 12 செ.மீ மழையும், கள்ளக்குறிச்சி தலா 10 செ.மு மழையும், சங்கராபுரம், சேத்தியாத்தோப்பு தலா 8 செ.மீ மழையும், வேப்பூர், மரக்காணம், திண்டிவனம், புவனகிரி, வானுர் தலா 7 செ.மீ மழையும், குறிஞ்சிப்பாடி, வீரகனூர், பெரம்பலூர், பெலந்தூரை, லப்பைக்குடிக்காடு, பெரம்பலூர், பரங்கிப்பேட்டை, அகரம், சீகூர் தலா 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.