கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகராட்சியில் நகர நிலவரித் திட்டம் கொண்டு வர வலியுறுத்தி, கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி, தினமணி இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது.
அச்செய்தியின் எதிரொலியாக, நகர நிலவரித் திட்ட அலகு தொடங்குவதற்காக, சென்னை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து, நிலவரித் திட்ட அதிகாரி கூறியது. கூத்தாநல்லூர் நகராட்சியில், நிலவரித் திட்டப் பணிகள் தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதின்படி, வட்டாட்சியர், சார் ஆய்வாளர், நில அளவர் மற்றும் உதவியாளர்கள் என 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில், 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
நகராட்சியில் உள்ள 24 வார்டுகளும் 4 வார்டுகளாகப் பிரிக்கப்படும். அதனடிப்படையில், ராமனாதன் கோயில், லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூர் மற்றும் பண்டுதக்குடி என பிரிக்கப்பட்டுள்ளன. ராமனாதன் கோயில் 22, லெட்சுமாங்குடி 17, கூத்தாநல்லூர் 40 மற்றும் பண்டுதக்குடி 20 என 99 பிளாக்குகள் உள்ளன.
இதையும் படிக்கலாம்.. தினமணி இணையதள செய்தி எதிரொலி: கூத்தாநல்லூரில் நில வரித் திட்டத்திற்கு ஆணை
திங்கள்கிழமை முதல், பட்டா வைத்திருப்பவர்கள், பட்டா இல்லாமல் இருப்பவர்கள் என நகரத்தில் உள்ள 24 வார்டுகளில் வசிக்கும் அனைவருக்கும், வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கப்படும். அதைத் தொடர்ந்து, பிளாக் வாரியாக அழைத்து, ஆய்வு செய்யப்படும். பத்திரம், பட்டா உள்ளிட்ட அனைத்தையும் விசாரித்து, அதற்கேற்றபடி பட்டா வழங்கப்படும். இந்தப் பணிகள் 3 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் நடைபெறும். தற்போது மன்ப உல் உலா தொடக்கப் பள்ளியில் உள்ள இந்த அலுவலகம் தற்காலிகமானதுதான். பொதுமக்களின் வசதிக்கேற்றப்படி மாற்று இடம் கிடைத்தவுடன் அலுவலகம் மாற்றப்படும் என்றார்.