கோப்புப் படம்
கோப்புப் படம்

ராணிப்பேட்டை: சுற்றுச்சூழலை மாசுபடுத்திய 29 தொழிற்சாலைகளுக்கு 6.88 கோடி ரூபாய் அபராதம்!

ராணிப்பேட்டையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்திய 29 தொழிற்சாலைகளுக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் 6.88 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ராணிப்பேட்டையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்திய 29 தொழிற்சாலைகளுக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் 6.88 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ராணிப்பேட்டை சிப்காட்டில் செயல்பட்டு வரும் திருமலை கெமிக்கல்ஸ் நிறுவனம், 24.09.2019 அன்று இரவு மழைநீர் வடிகாலில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவு நீரை திறந்து விட்டதாக பொதுமக்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் மீது ராணிப்பேட்டை சார் ஆட்சியர் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ஆய்வு செய்து ரசாயன மாதிரிகளை சேகரித்தனர். இந்த நிகழ்வின் மீது ராணிப்பேட்டை சார் ஆட்சியர் நீதிமன்றத்தில் நடைபெற்ற குற்றவியல் நடைமுறை சட்ட வழக்கில் விரிவான தீர்ப்பு வழங்கப்பட்டது. 

சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மழைநீர் வடிகாலில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் தொழிற்சாலையில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் தொழிற்சாலையை சுற்றி வெளிப்புறத்தில் இருந்து நீர் உட்புகாமல் கால்வாய்கள் வெட்ட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது. சுத்திகரிக்காத ரசாயன கழிவு நீரை திறந்து விட்டு மாசுபடுத்திய குற்றத்திற்காக 18.6 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.  

இதற்கிடையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் 14.11.2019 அளித்த தீர்ப்பின்படி மிக அதிகமாக மாசடைந்துள்ள தொழில் பகுதியான ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் குறித்த ஆய்வினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது. இதனடிப்படையில், சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் திருமலை கெமிக்கல்ஸ், மல்லாடி கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் 2 தொழிற்சாலைகள், அல்ட்ரா மரைன் பிக்மென்ட்ஸ், தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் 2 மத்திய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய 6 பெரிய நிறுவனங்கள் மாசுபடுத்தும் கழிவுநீரை வெளியேற்றியதாகக் கண்டறியப்பட்டது. 

இந்த பெரிய நிறுவனங்களின் மீது ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இது தவிர சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் 23 சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் கழிவு நீரை வெளியேற்றி மாசுபடுத்துவது கண்டறியப்பட்டது. இந்த தொழிற்சாலைகளின் மீது ரூபாய் ரூ.75 லட்சம் அபராதம் விதிக்க வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பரிந்துரை செய்தார்.   

இதனை ஏற்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழலை மாசுபடுத்திய குற்றத்துக்காக 29 தொழிற்சாலைகள் மீது 6.7 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத்தை 15 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலை மாசுபாட்டால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறியும் நிபுணர் குழு ஒன்றை அமைத்து முழுமையாக ஆய்வு செய்து முழுமையான இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com