
புகைப்படம்: பேஸ்புக் | ஸ்டாலின்
புதிய கல்விக் கொள்கைக்கு அதிமுக அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து- மாநிலத்தின் கல்வி உரிமையை நிலை நாட்டிட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில்,
"பிஞ்சுப் பருவத்திலேயே மாணவர்களின் கல்வி உரிமையைப் பறித்து, அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடக்கம் முதலே கடுமையாக வலியுறுத்தியது தி.மு.கழகம்.
டெல்லி எஜமானர்களின் கைப்பாவையாக உள்ள அதிமுக ஆட்சியாளர்கள் அதற்குச் செவிமடுக்க மறுத்து அமைதி காத்தது மட்டுமின்றி - ஒட்டுமொத்தத் தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி பொதுத் தேர்வு உண்டு என அரசு ஆணை பிறப்பித்தனர்.
தற்போது திடீர் 'ஞானோதயம்' ஏற்பட்டது போல பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளனர். இதிலாவது தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கைக்கு அதிமுக அரசு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து- மாநிலத்தின் கல்வி உரிமையை நிலை நாட்டிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
முன்னதாக, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை தமிழக அரசு இன்று ரத்து செய்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...