தனி நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க கட்டுப்பாடுகள் கொண்டுவர முடியுமா? என மத்திய, மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நிலம் கையப்படுத்துதல் தொடர்பான ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன் அமர்வு, 'தனி நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வாங்கக்கூடாது என ஏன் கட்டுப்பாடுகள் கொண்டு வரக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், 'நாட்டில் எத்தனை குடும்பங்களுக்கு சொந்த வீடுகள் உள்ளன? தமிழகத்தில் எத்தனை குடும்பங்களுக்கு சொந்த வீடுகள் உள்ளன? மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயன் பெற்றுள்ளனர்? திட்டம் எப்போது முடிவு பெறும்? ஆதிதிராவிடர், பழங்குடியினர் வீடு பெற அரசின் சிறப்புத் திட்டம் ஏதேனும் உள்ளதா?' என்று கேள்வி எழுப்பினார்.
அத்துடன், 'நாட்டின் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் எத்தனை பேரிடம் உள்ளன? தனி நபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை வாங்க கட்டுப்பாடுகள் ஏன் விதிக்கக்கூடாது? அல்லது தனி நபர் வாங்கும் 2வது வீட்டின் வரிகளை இரு மடங்காக ஏன் வசூலிக்கக் கூடாது?' என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
மேலும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் வருகிற மார்ச் 6ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர்.