அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு; இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தமிழக முதல்வராக நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு மூன்று ஆண்டுகளைக் கடந்து நான்காவது ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) அடியெடுத்து வைக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தில் ஆளுநா் மாளிகையில் தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றாா்.
இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
இதன் தொடர்ச்சியாக அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.