எவராலும் முடியாது என சொன்னவர்களிடம் முடியும் என்று முடித்துக் காட்டியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு மூன்று ஆண்டுகளைக் கடந்து நான்காவது ஆண்டில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 16) இன்று அடியெடுத்து வைத்துள்ளது.
இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
இதன்பின்னர் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதா அவர்கள் மறைந்த பின்னர் ஆட்சியை யாராலும் தொடர முடியாது என்று கூறியவர்கள் முன்னிலையில், முடியும் என்று முடித்துக்காட்டியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றார்.
தொடர்ந்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து பதிலளித்த அமைச்சர், 'சி.ஏ.ஏ. பற்றி தெரியாதவர்கள்தான் அதற்கு எதிராக போராடுகிறார்கள். சி.ஏ.ஏ. பற்றி தெரிந்தவர்கள் அமைதியாக இருக்கின்றனர்' என்று தெரிவித்தார்.