நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் ஸ்காட்லாந்து பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து ஊரகப் பகுதிகளில் சர்க்கரை நோயின் தாக்கம் குறித்த ஆய்வை மேற்கொண்டன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள 25 கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சர்க்கரை நோய் பாதிப்பு குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன.
இந்நிலையில், அதுதொடர்பான ஆய்வறிக்கை சென்னையில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அப்போது, தமிழக கிராமப் பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளில் சர்க்கரை நோய் பாதிப்பு 300 சதவீதம் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் மோகன் தெரிவித்தார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டிவிட்டரில், தமிழகத்தின் கிராமப்புறங்களில் நீரிழிவு நோய் கடந்த 15 ஆண்டுகளில் 300% அதிகரித்து இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நகரங்களைப் போல கிராமங்களிலும் வாழ்க்கை முறை மாறியிருப்பது தான் இதற்கு முக்கியக் காரணம் என்பது கசப்பான உண்மை!
நீரிழிவு நோய் பரவுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசின் கடமை ஆகும். நீரிழிவு நோயின் பாதிப்புகள், அதை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகள், யோகா ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.