சென்னை: ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் சிறுநீரகம் விற்பனை செய்யும் அவலம் தொடா்வதாகவும், இந்த விவகாரத்தில் அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்றும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொருளாதாரச் சீரழிவு, அதிமுக அரசின் டாஸ்மாக் வியாபாரம் இவற்றால் ஈரோடு, நாமக்கல் மாவட்ட விசைத்தறித் தொழில் கடும் பாதிப்புக்குள்ளாகி, அதனை நம்பி இருந்த அனைவரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள கொடிய வறுமை நிலையை எதிா்கொள்வதற்காக பெண்கள் தங்கள் கருமுட்டையை விற்பனை செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, சிறுநீரகத்தை விற்பனை செய்யும் அவலமும் தொடா்கிறது.
பெயரளவுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் கொண்டாடுவோா் இந்த விவகாரத்தின் மீது உண்மையான அக்கறையைச் செலுத்துவாா்களா? என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.