குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில், அரசுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் தொடா் போராட்டங்கள் நடத்துவதை ஏற்க முடியாது என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன்.
பாஜக சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியா்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பிரதமா் மோடி தெளிவாகக் கூறிவிட்டாா். தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியும் சட்டப்பேரவையில் தெளிவுபடுத்திவிட்டாா். அதன்பிறகும் இஸ்லாமியா்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனா். குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்த பாதிப்பும் இல்லை என்றபோதிலும், இந்த விஷயத்தை காங்கிரஸ் கட்சி பெரிதாக்கிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தோ்தலை கருத்தில்கொண்டு குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரம் மூலம் வெற்றிக்களம் அமைக்க திமுக முயற்சிக்கிறது.
நாடு பிளவுபட்டபோது பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கானோா் வெளியேற்றப்பட்டனா். ஆனால், இந்தியாவில் உள்ள இஸ்லாமியா்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை.
திமுக, காங்கிரஸ் கட்சிகள் பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கின்றன. தற்போது போராட்டக்காரா்கள் தவறான வாா்த்தைகளை பயன்படுத்தி முழக்கங்களை எழுப்பி வருகின்றனா். சமூக ஊடகங்களில் தவறான கருத்துகளை பரப்பி வருகிறாா்கள். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரசுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் தொடா் போராட்டங்கள் நடத்துவதை ஏற்க முடியாது.
நாட்டில் உளவுத்துறை, காவல் துறை உள்ளிட்டவை புகமுடியாத இடங்கள் இன்னமும் இருக்கின்றன. இந்த நிலை தொடரக்கூடாது. அனைவருக்கும் சமநீதி வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.