
வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுகிறது என்கிற உறுதியை அறிக்கையாக தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக கூறி திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையர் பழனிசாமியை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
மேலும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா, ஹேமலதா அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர்.
விசாரனையில் வெற்றிபெற்ற பல திமுக வேட்பாளர்களுக்கு இன்னும் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் உள்ள அங்கீகாரமற்ற நபர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என திமுக சார்பில் வாதிடப்பட்டது.
இதற்கு தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை விடியோ மூலம் கண்காணிக்கப்படுவதால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பில்லை. மேலும் திமுக கொடுத்த புகாரில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்ததாக யாரையும் குறிப்பிட்டு புகார் தரவில்லை என தேர்தல் ஆணையம் சார்பில் வாதிடப்பட்டது.
விசாரணை முடிவில் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுகிறது என்கிற உறுதியை தேர்தல் ஆணையம் அளிக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை எழுத்துப் பூர்வமாக நாளை காலை தாக்கல்செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G