மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்மாற்றியில் ஏறி ஒருவர் முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேல உரப்பனூரைச் சேர்ந்த சக்தி (25). ஹிமாசலப் பிரதேசத்தில் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.
இந்நிலையில் வரதட்சணைக் கொடுமை காரணமாக அவரது மனைவி திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து மதுரை வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்காக சக்தி குடும்பத்தினரும் அவரது மனைவி குடும்பத்தினரும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்தனர்.
அப்போது அங்கு, விசாரணைக்காக காத்திருந்த சக்தி திடீரெனஅங்கிருந்து ஓடிச் சென்று அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏறியுள்ளார். அவரை பின்தொடர்ந்து ஓடி வந்த உறவினர்கள் கீழே இறங்கி வருமாறு கூறியபோதும் அதைக் கேட்காமல் மின்கம்பியை தொட்டுள்ளார். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து தீப்பற்றிய நிலையில் அவர் தூக்கி எறியப்பட்டார். உடனடியாக, அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.