Enable Javscript for better performance
ramadoss on accident free tamilnadu ! சாலை விபத்தில்லா தமிழகம் படைக்க துணிச்சலான நடவடிக்கை வேண்டும்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சாலை விபத்தில்லா தமிழகம் படைக்க துணிச்சலான நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ்

    By DIN  |   Published On : 20th January 2020 04:47 PM  |   Last Updated : 20th January 2020 04:47 PM  |  அ+அ அ-  |  

    ramadoss on acident free tamilnadu roads

    பாமக நிறுவனர் ராமதாஸ்

     

    சென்னை: சாலை விபத்தில்லா தமிழகம் படைக்க துணிச்சலான  நடவடிக்கை வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக திங்களன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    உலகிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடு இந்தியா தான். இந்தியாவிலேயே அதிகளவில்  விபத்துகள் நிகழும் மாநிலம் தமிழ்நாடு தான். நாட்டிலேயே அதிக சாலை விபத்துகள் நடக்கும் பெரு நகரமும் சென்னை தான். இந்த சாதனைகள் நிச்சயம் நமக்கு மகிழ்ச்சியளிக்காது; வேதனையையே  அளிக்கும். இந்த அவல நிலைக்கு ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு காரணமோ, அதே அளவுக்கு  வாகன ஓட்டிகளும் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. வழுக்கிக் கொண்டு செல்லும் அளவுக்கு சாலைகளும், மின்னலாக சீறும் அளவுக்கு அதிநவீன வாகனங்களும் பெருகி விட்ட நிலையில் அவற்றை நமது கட்டுப்பாட்டில் வைக்காமல், அவற்றுக்கு நாம் அடிமையானது தான் இதற்கு காரணமாகும்.

    இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக நான்கரை லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்றரை லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். உயிர்க்கொல்லி நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விட சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் ஆகும். விபத்துகள் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு, உயிரிழப்புகளில் இரண்டாவது இடம் வகிக்கிறது. உதாரணமாக 2017-ஆம் ஆண்டில் இந்தியாவில் 4 லட்சத்து 64,910 விபத்துகள் நடந்தன. இவற்றில்   உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துகள் 1,34,796 ஆகும். இந்த விபத்துகளில் ஒரு லட்சத்து 47,913 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 65,562 விபத்துகள் நடந்துள்ளன. உயிரிழப்புகளைப் பொறுத்தவரை  உத்தரபிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 16,661 பேர்  உயிரிழந்துள்ளனர். இதை சாதாரணமான புள்ளிவிவரமாக கடந்து செல்ல முடியாது. சாலை விபத்துகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தான் இனிவரும் காலங்களில் இத்தகைய இழப்பை கட்டுப்படுத்த முடியும். சாலைவிபத்துகளைக் கட்டுப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளால் முடியாதவை அல்ல.

    விபத்தில்லா இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை உருவாக்கத் தேவை துணிச்சலான நடவடிக்கைகள் தான். இந்தியாவில் மணிக்கு 200 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் அதிவேக மகிழுந்துகள் அதிகரித்து விட்டன. அதற்கேற்ற வகையில் சாலைகளும் 4 வழிச்சாலைகளாகவும், 6 வழி, 8 வழிச்சாலைகளாகவும் விரிவடைந்து விட்டன. ஆனால், சாலைகளில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படாத நிலையில், சில வாகனங்கள் கண்மூடித்தனமான வேகத்தில் இயக்கப்படுவது தான் விபத்துகளுக்கு காரணமாகும். இதைக் கட்டுப்படுத்த வேண்டுமானால், நகரங்களுக்குள்ளும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளிலும்  இருப்பதைப் போலவே தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளிலும் வேக உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட இடைவெளிகளில் வேகத்தை அளவிடும் காமிராக்களைப் பொறுத்தி, அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து, கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    வெளிநாடுகளில் ஏதேனும் ஒரு இடத்தில் அடிக்கடி விபத்து நடந்தால், அதற்கான காரணத்தை ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் அதிகாரிகள், அக்குறையை உடனடியாக சரி செய்கின்றனர். ஆனால், நமது நாட்டில் ‘இது விபத்துப் பகுதி’ என்று அறிவிப்புப் பலகை வைத்து விட்டு கடமையை முடித்துக் கொள்கின்றனர். இந்த வழக்கத்தைக் கைவிட்டு, விபத்துப் பகுதிகளில் உள்ள குறைகளை சீரமைத்து, அதில் விபத்துகள் நடக்காமல் தடுக்க வேண்டும். இரு சக்கர ஊர்திகளில் சைலன்சரை அகற்றிவிட்டு பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அபாய சங்கு போன்று ஒலி எழுப்பிச் செல்வோரை பிடித்து அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்க வகை செய்ய வேண்டும்.

    முக்கியமாக ஓட்டுனர் உரிமம் வழங்கும் முறையை கடுமையாக்க வேண்டும். இந்தியாவில் சிறப்பாக  வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களால் கூட, வெளிநாடுகளுக்கு செல்லும் போது எளிதாக ஓட்டுனர் உரிமம் பெற முடிவதில்லை. ஆனால், தமிழகத்தில் மிகவும் எளிதாக மகிழுந்து ஓட்டுனர் உரிமம் கிடைக்கிறது. இது தான் விபத்துக்கான முக்கியக் காரணமாகும். எனவே, தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளை மிகவும் கடுமையானதாக மாற்றியமைக்க வேண்டும். மேற்கண்ட அதிரடியான நடவடிக்கைகளின் மூலம் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் இல்லாத இந்தியாவும், தமிழ்நாடும் உருவாக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

    இவற்றுக்கெல்லாம் மேலாக, வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு நான் கூறும் அறிவுரை அதிகாலை 2.00 மணி முதல் 4.00 மணி வரை வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என்பது தான். அந்த நேரத்தில் தான் உறக்கம் காரணமாக அதிக விபத்துகள் நிகழ்கின்றன என்பதால், அதிகாலை வேளையில் வாகனங்களில் பயணிப்பதை தவிர்த்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்படி  கேட்டுக்கொள்கிறேன். 

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp