நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியிலுள்ள அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 'நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக இருப்பதாக முதல்வர் பழனிசாமியிடம் கூறினேன்.
ஏற்கெனவே விபத்து நடந்த இடத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.