சென்னை காவல்துறை உதவி ஆய்வாளர் மணிமாறன் கரோனாவுக்கு பலி
சென்னை பட்டினப்பாக்கம் சிறப்புக் காவல்துறை உதவி ஆய்வாளர் மணிமாறன் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில், கரோனா தடுப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினர், அதிகளவில் தொற்றுப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கெனவே, மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், சென்னை காவல் துறையில் இரண்டாவது காவலர் தற்போது உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 57 வயது சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் கரோனா நோய்த் தொற்று பாதித்து, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
தமிழகத்தில் இதுவரை 1,155 காவலர்கள் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 422 பேர் குணமடைந்து பணிக்குத் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.