திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வங்கி ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று, உறுதியானதையடுத்து, அந்த வங்கியின் 2 கிளைகளும், புதன்கிழமை மூடப்பட்டது.
மன்னார்குடி கோபாலசமுத்திரம் கீழவீதியில் அரசுடமையாக்கப்பட்ட தனியார் வங்கியின் கிளை உள்ளது. இதேபோன்று இந்த வங்கியின் கிளை காந்தி சாலையில் உள்ளது.
கோபாலசமுத்திரம் கிளை வங்கியில், மன்னார்குடி அடுத்த அசேசம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர், இரண்டு தினங்களுக்குமுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், புதன்கிழமை மருந்து பரிசோதனையின் முடிவு வந்ததில், வங்கி ஊழியருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவரை, மருத்துவக் குழுவினர் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
வங்கி ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியானதால், கோபாலசமுத்திரம் கீழவீதி மற்றும் காந்தி சாலையில் உள்ள சம்மந்தப்பட்ட வங்கியின் இரண்டு கிளைகளிலும் இருந்த அலுவலர்கள் வாடிக்கையாளர்களை உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மன்னார்குடி நகராட்சி நிர்வாகத்தின் சுகாதாரப் பிரிவினர் வங்கிகள் மற்றும் அதன் சுற்றுபகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனர்.
இதனால் இரு வங்கிகளிலும் சேவை முடங்கியது. வங்கிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.