பரமக்குடி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரான சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவர் ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. மேலும், எம்எல்ஏவின் மகன் மற்றும் உதவியாளருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர்களும் ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எம்எல்ஏ தொடர்ந்து பொது மக்களுக்கு நிவாரண பொருள்கள் மற்றும் முகக் கவசம் வழங்கியதால் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அதிமுகவில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனிக்கும், அதிமுக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கும் கரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேபோன்று திமுகவிலும் கரோனா பாதிப்புக்குள்ளான நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.