செஞ்சி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மஸ்தானுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஒரு திமுக சட்டப்பேரவை உறுப்பினருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது திமுகவினரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வசந்த கார்த்திகேயன் மற்றும் செய்யூர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.டி.அரசு ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் முறையே கோவை, சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியைச் சேர்ந்த திமுக வடக்கு மாவட்டச் செயலரும், செஞ்சி தொகுதி எம்எல்ஏவுமான கே.எஸ்.மஸ்தானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்ததால், விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தொற்று உறுதி ஆகியுள்ளது. தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளார்.
அண்மையில் திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று சென்றதால், அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.
திமுகவில் கரோனா தொற்று பாதித்த நான்காவது சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.