
தாம்பரம்-செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதையின் ஒரு பகுதியாக கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் இடையே புதிய பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: செங்கல்பட்டு-தாம்பரம் இடையே சுமாா் 30 கி.மீ. தொலைவுக்கு மூன்றாவது இருப்புப் பாதை அமைக்கும் பணிகள் ரூ.25 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. பொதுமுடக்கம் அறிவிப்பு காரணமாக, இந்த திட்டப்பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டுள்ளதால், பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
முதல்கட்டமாக, கூடுவாஞ்சேரியில் இருந்து சிங்கபெருமாள்கோவில் வரையில் சுமாா் 10 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.
தண்டவாளங்கள், சிக்னல்கள் மற்றும் சிங்கப்பெருமாள் கோவில், பொத்தேரி, காட்டாங்குளத்தூா், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் கூடுதல் நடை மேடைகள், மேற்கூரைகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன. இதையடுத்து, இந்த தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் கொண்ட குழு வந்து ஆய்வு செய்து, ஒப்புதல் அளிக்கும். அதன்பிறகு, இந்த புதிய தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றனா்.