
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட உள்ளது.
இதற்காக அரசுப் பணிகள் ஏதும் நடைபெறாது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறும் என்று தலைமைச் செயலாளா் க.சண்முகம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தாா்.
அதன்படி, கடந்த மாதம் இரண்டாவது சனிக்கிழமையன்று அரசு அலுவலகங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பின்னா் அவை பூட்டப்பட்டன. அதேபோன்று, இந்த மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையிலும் (ஜூலை 11) அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பூட்டப்படும். மீண்டும் திங்கள்கிழமை முதல் பணிகள் தொடங்கப்பட உள்ளன.