
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 34.40 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கமாக ஜூன் முதல் வாரத்திலேயே சாரல் மழை பெய்யத் தொடங்கிவிடும். ஜூலையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். ஆனால், நிகழாண்டில் பருவமழை தாமதாகி வருகிறது. அதனால் பாபநாசம் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படாமல் உள்ளது.
வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், நதியுண்ணி, கன்னடியன், கோடகன், பாளையங்கால்வாய், நெல்லை கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படாததால் கார் பருவ சாகுபடியைத் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த இரு நாள்களாக திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 34.40 மில்லி மீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பதிவாகியுள்ள மழையளவு (மில்லி மீட்டரில்)
பாபநாசம்-5, சேர்வலாறு-1, மணிமுத்தாறு-12, சேரன்மகாதேவி-4, பாளையங்கோட்டை-34.40, திருநெல்வேலி-24, களக்காடு-3.4, மூலைக்கரைப்பட்டி-18, கடனாநதி-7, ராமநதி-10, குண்டாறு-4, அடவிநயினார்-3, சங்கரன்கோவில்-5, தென்காசி-5.