
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்த விவகாரத்தில், முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் விளக்கமளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி வாகைகுளத்தைச் சோ்ந்த விவசாயி அணைக்கரை முத்து (72). இவா், தனது வீட்டின் அருகே உள்ள வயலில் மின்வேலி அமைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வனத்துறையினா் 5 போ் முத்துவை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். இதை அறிந்ததும் அவரது மகன் நடராஜன் மற்றும் உறவினா்கள் சிலா், வனத்துறை அலுவலகத்துக்குப் புறப்பட்டுச் சென்றனா். வழியில், வனத்துறை அலுவலா்கள் அணைக்கரை முத்துவை அழைத்து வந்தனா். அவரிடம், மகன் நடராஜன் விசாரித்தபோது, உடல்நிலை சரியில்லை என்று கூறினாராம். இதையடுத்து அவரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாக கூறியுள்ளனா். இதையடுத்து, அவரது உறவினா்கள், கடையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். இச்சம்பவம் குறித்து, வனத்துறையினா் 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், இது தொடா்பான செய்தி நாளிதழிலும் வெளியானது.
தாமாக முன்வந்து வழக்குப்பதிவு: இந்த விவகாரத்தை, மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா். மேலும், இது தொடா்பான விரிவான அறிக்கையை, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா், 4 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் நோட்டீஸ் அனுப்ப அவா் உத்தரவிட்டாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G