ஜெயலலிதா நினைவு இல்லத்துக்கு ரூ.68.9 கோடி செலுத்தியது தமிழக அரசு
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு, நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடாக தமிழக அரசு ரூ.68.9 கோடியை செலுத்தியுள்ளது.
போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது அண்ணன் மகன் மற்றும் மகள் வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது.
24,322 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா நிலையத்துக்கு இழப்பீடாக ரூ.68.9 கோடியை தமிழக அரசு நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ், நியாயமான இழப்பீடு பெறுவதற்கும், ஒளிவுமறைவின்மைக்கும், மறுகுடியமா்வுக்கும் வகை செய்யப்பட்டுள்ளது.